புதன், 16 மார்ச், 2022

காதலோடு வாழ்வோம் -5



 
உனக்காக நான் எழுதிய ஆயிரம் கவிதைகளில் 
சொல்லாத காதலெல்லாம் உனக்கான காத்திருப்புகளின்
பேரமைதியில் விசும்பல்களாய் நிறைந்து கிடக்கிறது .
என் கவிதைகள் அத்தனை உரத்துக் கத்தியபோதும் 
கேட்காத உனக்கு என் பேரமைதியின் விசும்பல்கள்
புரிந்து விட  சாத்தியங்கள சாத்தியமாயில்லை.
இருந்தும் உனக்கான காத்திருப்புகள் நீளும், 
காதல் ஒரு நாள் உன்னையும் சூழும்,
அன்று நீ இதுவரை கண்டுணரா உணர்வுகள் 
இதயம்தனை ஆட்கொண்டு திக்குமுக்காட செய்யும் 
அன்று உனக்கான  என் கவிதைகளைப் படி 
மெல்லப் புரியும் அவை காகிதத்தில் 
சிதறிய மைத்துளிகள் மட்டுமல்ல என்று,
அவை உன் கண் மை கலைத்து
காகித மையோடு கலந்துவிடும் நேரம்
புரிந்து கொள், நீ உண்மை உணர்ந்தாய் என்று,
இதுதான் காதல், வெறும் காதல்.
ஆம் அந்தக் காகிதம் நிறைத்ததெல்லாம் 
உன் மீதான என் காதலின் 
கரை கொண்ட கிளிஞ்சல்கள் மட்டுமே.
கடல் இன்னும் அப்படியே இருக்கிறது.
உனக்கான காத்திருப்புகளின் விசும்பல்களாய்.
கடல் கொண்டும் கனியாத காதல்,
உன் இமை கொண்ட நீரின் தீரத்தில் 
தானாய்க் கனிவது காண் என் சகியே.
அன்று வா, நீ படித்த கவிதைகளில் 
உணராத காதலை எல்லாம் 
என் மௌனங்கள் சத்தமாய் உரைப்பதை 
இதயத்தின் வாயிலில் உணர்வாய். 
அதுவரை காத்திருக்கிறேன் நான்.
உன்னைப் பற்றி எந்த ஒரு கற்பனைகளுமற்று, 
நீ யார், எங்கிருக்கிறாய் என் எதைப் பற்றியும்  அறியாமலே, 
வெறும் காதலுடன் மட்டும் காத்திருக்கிறேன். 
காதல் சிறு வார்த்தைதான் ஆனால் 
அது பிரபஞ்ச இயக்கத்தின் அச்சாணி என்பதை உணர்ந்து 
என் பிரபஞ்சத்திற்க்காய் காத்திருக்கிறேன்.

காதலோடு வாழ்வோம் - 4


எண்ணற்ற கவிதைகள் எழுதி
ஒவ்வொன்றிலும் காதலை
முன்பை விட அதிகமாய்
வெளிப்படுத்தி முடித்தும்
அதிர்வுகளற்று இருக்கும்
அவளிடம் எப்படிச் சொல்வேன்
இது வெறும் கவிதைகளில்லையடி
உன்னுடனான என் கனவுகளில்
மொழிந்தெடுக்கபட்ட பகுதிகள்.
உனக்கான கவிதைகளை
வாழ்ந்து பார்க்க அழைக்கிறேன்.
நீயோ வார்த்தைகளை ரசிப்பதோடு
முடித்துக் கொள்ள விளைகிறாய்.

உனக்கான காதல்


நெஞ்சகத்தே முளைத்து 
நெஞ்சுருக்கி வளர்ந்து 
கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னைத் தின்னும் 
எதோ ஒன்றை காதலென்று 
நான் கூறினால், காதலி யாரென்றாய்  நீ...
கனவு வளர்த்தேன்
கனவுள்ளே கானகம் ஒன்று,
கானகத்தில் பூக்கள் வளர்த்தேன்,
பூக்களுக்கு சொந்தக்காரி 
பூக்களில் மனமாய் வாசம் செய்கிறாள் என்றேன்,
சத்தமில்லாமல் சிரித்தாய் நீ...
புன்னகைப் பூவே,
என் அகம் முழுவதும் நிறைந்தவள் 
புறத்தில் யாரென்றறியேன்,
நெஞ்சுள்ளே புதைந்த காதல், 
பிரபஞ்சப் பெருவெளி முழுதும் 
நிறைந்து வழிகிறது,
அது அவளுக்கு மட்டுமானது.
அவள் என் நெஞ்சுள் மட்டுமே நிறைந்தவள்.
காதலுக்கான தேடல்  பிரபஞ்சமெங்கும், 
காதலிக்கான தேடல் கனவுகளில் மட்டும்.
விண்ணோடு பேசியதையெல்லாம்  
உன் கண்களில் முடித்தேன்,
மென்மையாய் கரம்பிடித்து 
மௌனமாய் என்னை பார்த்தாய். 
நீ திரும்பிப் போன வழியை 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னோடு உனக்கான காதல் 
நடை பயின்று கொண்டிருக்கிறது.  

:- கௌதமன் ராஜகோபால்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சரணாகதி


ஆணவம் கன்மம் மாயை கொண்ட

கள்வன் உள்ளிருக்கும்வரை

கயிலையம் பதியோ

கங்கா தீர்த்தமோ

காசி மஹா மயானமோ

உனை கரையேற்றுவது கடினம்...


சொல்லவொனா சோதியின்

காணவொனா காந்தி

உள்ளிருந்து பிரகாசிக்கும் தருணம்

எல்லைகளற்றவனின் எல்லையில்

நீ எங்கிருந்தாலும்

அங்கிருந்தே கரையேற்றப்படுவாய்...


ஆத்ம ஞானம் உண்டாகும்போது‌

உள்ளிருக்கும் ஆதிசோதி

சுயம் பிரகாசிக்கத் தொடங்கும்..


ஆத்ம ஞானம் அது ஈசனின் பாதம்.

ஈசனின் பாதம் பற்றும் ஒற்றை வழி

அஹங்காரம் விட்டொழித்து

குருபாதம் பணிதல் ஒன்றே...


குருவை எங்கே தேடுவது??

உன் பிறப்பு உறுதியானபோதே

பிறந்திருப்பார் உனக்கான குரு..

அவர் யார் என நீ அறிய‌

அவசியங்கள் இல்லை.

ஏதுமற்றவனை எல்லையிலா வெளியில்

தேடித் தேடித் தேடல் தெளிவு பெற்று

புறமுக பற்று அந்தர்முகமாகும் தருணம்

சரீரச் சார்பு நீங்கி

சத்தியம் தெளியும் வேளை

உன்னோடான குருவின் ஈர்ப்புவிசை வலுப்பெறும்.

ஏனெனில் ‌உருவங்கள் வேறுபட்டாலும்

உள்ளிருக்கும் உருப்பொருள் ஒன்றென்பதால்.

உன்னுள் இருந்து உனை இயக்கும் ஒன்று

உன் முயற்சியேதுமின்றியே உனை குருபாதம் சேர்க்கும்..

குருவின் தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

சத்தியம் தெளிந்த சரணாகதி..

அதைப் போதித்து உனை அவர்நிலை உயர்த்தவே

ஜென்மங்களாய் உனைத் தொடர்கிறார்...


எனக்காக‌ப் பிறப்பெடுத்து

உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவித்து

எனை உயர்த்த என்னுள் உயிர்த்திருக்கும்

என் குருநாதரின் பாத கமலங்களே சரணம் சரணம்..


குருவே தாயுமானவர்

குருவே தந்தைக்கும் நேர்

குருவே சற்குரு நாதனும்

குருவே தெய்வமும் ஆகுமே...


குருவே சரணம்...

என் குரு

 


அம்மையும் அப்பனும் ஆக்கிய உடலிது

மறலி தீண்டிடில் மண்ணது உண்ணுமே.. 

மன்னவன் தாளது கண்டிடா சீவன்தான்

மாண்டே பிறந்திடும் பின் மாண்டிடும் பிறவிக்காய்...

மறலியும் பிறவியும் சுழலதைப் போலவே

சுழற்றி எடுத்திடும் பின் கழற்றி எறிந்திடும்...

நித்தமும் வாழ்ந்திடும் வாழ்வது வேண்டிடில்

பெற்றிடு நீயதை குருபக்தியின் மூலமே...

சீவனின் குருதனை சீவனே அறிந்திடும் 

சிவனிடம் பணிவதே குருபதம் சேர்த்திடும்..

குருபதம் கிடைத்தலோ எத்தகு வரமெனில்

சிவனவன் சிந்தையில் நின்முகம் காணல்போல்...

சீவன்தான் குருதனை கண்டிட்ட மறுகணம்

மீண்டுமே ஒருமுறை ஈன்றெடுப்பார் குருவுனை...

பெற்றவர் ஈன்றது மற்றநாள் தீரினும்

குருவவர் ஈன்றது அவரையே சார்ந்திடும்...

என்னிலே உறையும் இச்சீவனை ஈன்றிட்ட

குருவவர் கனிவது இயம்புவேன் கேளுமின்...

தில்லை மாநகர் ஆடிடும் நாதனின்

எல்லையற்றதோர் கருணையின் தெளிவு...

அங்கம் ஆண்டிடும் தேவி சக்தியின்

பங்கமற்றதோர் பாசத்தின் விளைவு...

கண் காணத்துடித்திடும் கயிலாய வாசர்கள்

அம்மையப்பனின் அன்பின் செறிவு..‌.

சென்ம சென்மமாய் அலைந்து திரிந்திட்ட

ஆத்ம சக்தியது அடங்கிய உறவு...

மறலி தீண்டா மெய்வழி தெய்வத்தின்

தெய்வமாக் கருணையில் வார்த்த வளர்ப்பு...

ரமண மகரிஷியின் ஞான ஒளியாம்

நொச்சூர் அண்ணனின் பாசப்பிணைப்பு...

அண்டம் முழுதும் அடக்கவல்ல

ஆத்மவித்யையின் ஞானத்திறப்பு...

விண்ணையும் மண்ணையும் ஆண்டிடும் ஈசனின்

வண்ணமாய் பூமியில் வாழ்ந்திடும் நாதனே...

என்னையும் உன்னிலே ஐக்கியம் ஆக்கினாய்

புண்ணியம் மாதவம் செய்தனோ அறிகிலேன்...

தாம் மண்ணிலே உதித்த இப்பொன்நாள்தனில் 

பணிகிறேன் சரணமாய் நின்பத மலர்களில்...

ஆற்றியும் தேற்றியும் காத்திடும் குருவுமை

பணிவதின் பயனது சேர்த்திடும் சிவபதம்..

சிவபதம் சேர்வதே சீவனின் எல்லையாம்

ஏற்றிடும் எமையுமே சேர்த்திடும் நினதெல்லையில்

பெண்...





















தமிழில் இது வெறும் வார்த்தை அல்ல

தமிழ் படைத்தோன்

அறிந்த பெண்ணின் பெருமை.

ஆண் வெறும் உயிரும் மெய்யும் தான்.

அவன் மெய் உயிர் சுமப்பதில்லை.

ஆனால் பெண்ணிற்கு அது போதாதே!

மனித சமுதாயத்தின் கருப்பை அல்லவா அவள்.

பிறப்பெடுக்கும் பொழுதே தன் மெய்யில்

உயிர் சுமக்கும் உரிமை பெற்றவள் அவள்.

அதனால்தான் அவள் "பெண்".

உயிர்மெய்யுடன் மெய் கலந்தவள்.

மனிதம் மலர பெண்தான் ஆதாரம்.

மனிதம் வளர பெண்தான் வலிமை.

மனிதம் உயர பெண்மை காப்போம். 

பெண்மை போற்றுதும்.

பெண்மை போற்றுதும்.

உயிர் உள்ள வரை 

"உன் மெய்" போற்றுதும்.

உன் மெய் என்பதும்

ஒரு பெண்ணின் உதிரம்.

உண்மை அறிந்தோர்

பெண்மை போற்றுதும்.

உண்மை மறந்தோர்

உன் மெய் உணர்வீர்.

என் வாழ்வில் நான் அறிந்த

எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம்...

காதல் எனைக் கொண்ட நாள்








பதின்மம் தொட்ட நாள் முதலாய்

ஆண்டுகள் பல கடந்தேன்

நெஞ்சம் நிறைந்த காதலுடனும்

கொஞ்சும் கவிதை மாலையுடனும்...

ஒரு காதலியைத் தேடும்

அவசரமோ அவசியமோ

என்னை ஆசைக் கடலில்

அமிழ்த்தி விடாமல்

வாஞ்சையோடு வாழ்வெனைக் 

கவனித்ததின் காரணம்,

பின்னொரு நாளில் 

காலமெல்லாம் எனைக்

காதலால் மட்டுமே ஆளவிருக்கும்

அன்புள்ளமொன்றை 

என் வாழ்வின் துணையென

வாழ்வின் வழியதனில்

கண்டெத்திய நேரம்

உறவுகள் ஒன்றுகூடி 

உலகறிய உன் கரம் பிடிக்க

நிச்சயம் செய்தநாள் இது..

எத்தனை வாஞ்சை என்மீது

இக்காதலுக்கும்  இவ்வாழ்வினுக்கும்..

கவிதைக் காதலனுக்கு

கவிதையாய் ஒரு காதலியை

காதலர் தினத்தன்று

முதன்முதலாய் கரம் பிடிக்கும்

திருநாளை ஈந்தளிக்க...

இது நான் காதல் கொண்ட நாள் அல்ல.

காதல் எனைக் கொண்ட நாள்.

பிரபஞ்சம் நிறைந்த காதலால்

தினம் தினம் எனைக் கொண்டாடும்

என் அன்புக் காதலினாலான மனைவியே.

இதோ வாழ்வு எனக்களித்த பொக்கிசத்தின் கரம் பற்றி 

ஐந்தாம் ஆண்டில் அடிவைக்கிறேன்,

அனுதினம் அதிகரிக்கும் காதலுடன்..

உன் அன்பெனும் ஆளுகையில்

வாழ்வெனும் கவிதையை மூச்சிருக்கும்வரை

நேசித்து வாசிக்க வாழ்ந்திருப்பேன்..

என்றும் உனக்கான காதலுடன்.